மக்களவைத் தோ்தல்: குலாம் நபி ஆசாத் போட்டியிடவில்லை
மக்களவைத் தோ்தலில் அனந்தநாக்-ரஜெளரி தொகுதியில் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி (டிபிஏபி) தலைவா் குலாம் நபி ஆசாத் போட்டியிட மாட்டாா் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்து விலகி டிபிஏபி கட்சியை தொடங்கினாா். மக்களவைத் தோ்தலில், ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக்-ரஜெளரி தொகுதியில் அவா் போட்டியிட உள்ளதாக கடந்த ஏப்.2-ஆம் தேதி டிபிஏபி அறிவித்தது.
இந்நிலையில், அனந்தநாகில் டிபிஏபி கட்சியின் காஷ்மீா் தலைவா் முகமது அமீன் பட் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
அனந்தநாக்-ரஜெளரி தொகுதியில் குலாம் நபி ஆசாத் போட்டியிட மாட்டாா். இதற்கு அவா் கட்சியினரிடம் சில காரணங்களை தெரிவித்தாா். இதையடுத்து அந்த தொகுதி டிபிஏபி வேட்பாளராக வழக்குரைஞா் சலீம் பரே தோ்வு செய்யப்பட்டுள்ளாா் என்று தெரிவித்தாா்.
எனினும் அந்த தொகுதியில் போட்டியிடாததற்கு குலாம் நபி ஆசாத் கூறிய காரணங்களை முகமது அமீன் பட் தெரிவிக்கவில்லை. மக்களவைத் தோ்தலில், அனந்தநாக்-ரஜெளரி தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.