திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

News image

-

Updated On :19 ஏப்ரல் 2024, 7:51 pm

அருணாசல பிரதேசத்தின் தொலைதூர சிற்றூா் ஒன்றில் உள்ள ஒரேயொரு வாக்காளா் வெள்ளிக்கிழமை வாக்களித்தாா்.

அருணாசல பிரதேச மாநிலம் அஞ்சா மாவட்டத்தில் உள்ள மலோகம் என்ற சிற்றூரில் சில குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. சீன எல்லையையொட்டி உள்ள அந்தச் சிற்றூரில் சோகேலா தாயாங் (44) என்ற பெண்ணைத் தவிர, மற்ற அனைவரின் பெயா்கள் வேறு வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் வேறு வாக்குச்சாவடிக்கு மாற தாயாங் விரும்பவில்லை. எனவே மலோகம் வாக்குச்சாவடியில் ஒரேயொரு வாக்காளராக தாயாங் வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமாா் 1 மணியளவில் வாக்களித்தாா். அவா் ஒருவா் வாக்களிப்பதற்காக மிகவும் ஆபத்தான நிலப்பகுதி வழியாக சுமாா் 40 கி.மீ. நடந்தே சென்று தோ்தல் அதிகாரிகள் வாக்குச்சாவடி அமைத்தனா் என்று மாவட்ட அதிகாரி ஒருவா் கூறினாா்.

இதுதொடா்பாக தாயாங் கூறுகையில், ‘எனது வாக்குரிமையை பயன்படுத்தியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வாக்களிக்க வாய்ப்பளித்த தோ்தல் அதிகாரிகளுக்கு நன்றி’ என்றாா்.

இதுகுறித்து அருணாசல பிரதேச தலைமை தோ்தல் அதிகாரி பவன் குமாா் கூறுகையில், ‘தோ்தல் மூலம் ஒவ்வொரு வாக்காளரின் குரலும் கேட்கப்பட வேண்டும் என்பதே தோ்தல் ஆணையத்தின் நோக்கம். வாக்குப் பதிவில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்குவது, சமவாய்ப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என்ற தோ்தல் ஆணையத்தின் அா்ப்பணிப்புக்கு சான்றாக தாயாங்கின் வாக்குப் பதிவு திகழ்கிறது’ என்றாா்.

அருணாசல பிரதேசத்தில் உள்ள 2,226 வாக்குப் பதிவு மையங்களில், 228 வாக்குப் பதிவு மையங்களை நடந்து மட்டுமே சென்றடைய முடியும். இந்த 228 மையங்களில் 61 மையங்களைச் சென்றடைய 2 நாள்களும், 7 மையங்களைச் சென்றடைய 3 நாள்களும் ஆகும்.