சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் போன்ற போலி இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்ட கேரள இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னைமெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு www.chennaimetrorail.org என்ற இணையதளம் செயல்பட்டு வரும் நிலையில், www.cmrlco.org என்ற பெயரில் போலி இணையதளத்தில் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளதாக விளம்பரங்கள் வெளியாயின. இதையடுத்து அந்த போலி இணையதளத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. அவை சமூக ஊடகங்களில் வைரலானது.
இதையடுத்து CMRL என்ற இணையதளத்தில் ஆட்சேர்ப்புக்கான எந்தவொரு விளம்பரத்தையும் வெளியிடவில்லை என மறுத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாளர், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள புகைப்படங்கள், டிசைன்களுடன் காண்பதற்கு அதிகாரப்பூர்வ இணையதளம் போன்றே போலியாக உருவாக்கப்பட்டு, வேலைவாய்ப்பு விளம்பரங்கள் வெளியாகி இருந்ததை கண்டு அதிர்ந்து போனார். இதுதொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். போலியாக இணையதளம் உருவாக்கி, அதில் வேலை வாய்ப்பு இருப்பதாக விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார், போலி இணையதள பக்கத்தை முடக்கி, மோசடியில் ஈடுபட்ட நபரை தேடி வந்தனர். இந்த நிலையில், கேரளாவிலிருந்து போலி இணையதளம் இயக்கப்படுவதை அறிந்த சைபர் கிரைம் போலீஸார், கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ஸ்ரீஜித்(34) என்பவரை சனிக்கிழமை கைது செய்தனர்.
ஸ்ரீஜித்திடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தான் எம்பிஏ பட்டதாரி என்றும் போலி இணையதளம் மூலம் வேலை வாய்ப்பு விளம்பரங்களை அளித்து, அதன்மூலம் பலரை ஏமாற்றலாம் என திட்டமிட்டு இருந்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து ஸ்ரீஜித்தை சென்னை அழைத்து வந்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போலி இணையதளம் மூலம் எத்தனை பேரிடம், எவ்வளவு ரூபாய் மோசடி செய்யப்பட்டது, மெட்ரோ ரயில் பணி வழங்குவதாக ஏற்கனவே, கைதான மோசடி கும்பலுடன் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த ஸ்ரீஜித்தை போலீஸ் காவலில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.