'குரூப் - 1' தேர்வு பதவிகளுக்கான இடங்களை பெற்றுத் தருவதாக பணம் பறிக்கும் ஏமாற்றுப் பேர்வழிகள், இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப் - 1-இல் அடங்கிய, பல்வேறு பதவிகளுக்கான, முதல் நிலை தகுதி தேர்வை, 2017 பிப்., 19-இல், நடத்தியது. இதன் முடிவுகள், 2017 ஜூலை, 21-இல், வெளியாகின.
இதையடுத்து, பிரதான தேர்வு, அக்., 13, 14, 15 ஆம் தேதிகளில் நடந்தது. தேர்வு முடிவுகளை, டிசம்பர் இறுதிக்குள் வெளியிட உத்தேசிக்கப்பட்டு, விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. விடைத்தாள் திருத்தும் பணி, மிக நேர்மையாகவும், பாதுகாப்பாகவும், ரகசியம் காப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடனும், நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து, அவ்வப்போது வெளியாகும் தவறான மற்றும் அவதுாறான தகவல்கள் குறித்து, தேர்வர்கள் கவலைப்பட தேவை இல்லை. ஏமாற்றுப் பேர்வழிகள் மற்றும் இடைத்தரகர்களின், தவறான வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.