முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களது வீட்டை காலி செய்யக்கூடாது என்றும் அரசு மனிதாபிமானம் இன்றி செயல்படுவது மிகுந்த கவலைக்குரியது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதல்வர் காமராஜ் அவர்களின் அமைச்சரவையில் அமைச்சராக இடம் பெற்று பொதுவாழ்வுக்கு முன்னுதாரணமாக விளங்கியவர் கக்கன் அவர்கள்.
அவருக்கு என்று சொந்தமாக வீடு இல்லாத நிலையில், அவரும், அவருக்கு பின்னர் அவரது குடும்பத்தாரும் வசிப்பதற்காக எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக இருந்தபோது, வாடகை இன்றி ஒரு சிறிய வீடு ஒன்று அரசால் வழங்கப்பட்டது.
தற்போதைய அரசு, அவ்வீட்டை காலி செய்திட வேண்டும் என்று கக்கன் குடும்பத்தினருக்கு கடுமையான நெருக்கடி கொடுத்துவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அரசு மனிதாபிமானம் இன்றி செயல்படுவது மிகுந்த கவலைக்குரியது.
எம்.ஜி.ஆர். அவர்கள் வழங்கிய வீடு பழுதடைந்து இருக்குமேயானால் அதனைப் புதுப்பித்து தர வேண்டும் அல்லது வேறொரு வீட்டை வழங்க அரசு முன் வரவேண்டும்.
இரண்டும் இன்றி, வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்தினால் அவர்கள் எங்கே செல்வார்கள்.
அரசு கக்கன் குடும்பத்தினருக்கு எதிராக செயல்படுவதை கைவிட்டு, அவரது குடும்த்தினரை பாதுகாக்க முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.