மகாத்மா காந்தி "தற்போதைய சட்டமறுப்பு இயக்கம் ஆரம்பமாகுமுன்' விடுத்துள்ள அறிக்கை ஒன்றை காங்கிரஸ் பொது காரியதரிசி ஆச்சார்ய கிருபளானி எல்லா மாகாண காங்கிரஸ் கமிட்டிகளுக்கும் மாகாண பாஷைகளில் மொழிபெயர்க்கப்பட்டு விநியோகிக்கப்பட அனுப்பியிருக்கிறார்.
அதனுடன் ஆச்சார்ய கிருபளானி வைத்தனுப்பியுள்ள கடிதத்தில், மகாத்மா ""சில விஷயங்கள் வலியுறுத்தப்பட வேண்டும்'' என்று விரும்புவதாக அவர் கூறுகிறார். அவர் அறிவிப்பதாவது:
""காங்கிரஸின் நாளாவிருத்தி காரியாதிகள் எப்பொழுதும் போல நடைபெற்று வர வேண்டும் என்று மகாத்மா விரும்புகிறார்.
நிர்மாண திட்டத்தில் விசேஷ கவனம் செலுத்தப்பட வேண்டும். நிர்மாண திட்டத்திற்கும் சத்தியாகிரக இயக்கத்திற்கும் நெருங்கிய ஜீவகளையுள்ள தொடர்பு இருப்பதாக அவர் கூறுகிறார். அஹிம்சைப் போரின் இரு முகங்கள் அவை.
பக்தி சிரத்தையுடன் நிர்மாண திட்டத்தை நடத்தி வருகிறவர்களே சத்தியாக்கிரகத்திற்கு, அதில் எந்தவிதத்திலும் கலந்து கொள்ளாமல் ஒத்தாசை செய்பவர்களாகும் என மகாத்மா நம்புகிறார். நூற்பது, கதர் உட்பட நிர்மாண திட்டத்தை நடத்தாதவர்கள் சட்டமறுப்புச் செய்ய தகுதியுடையவர்கள் அல்ல. ஆகையால் நிர்மாண திட்டம் ஊக்கத்துடனும் சக்தியோடும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.''
பொது காரியதரிசி தமது சுற்றுக் கடிதத்தில், காங்கிரஸ்வாதிகள், அங்கத்தினர் பதிவை அதிகப்படுத்த எல்லா முயற்சிகளும் செய்ய வேண்டும். பிரைமரி அங்கத்தினர் பதிவு கடைசி தேதி நெருங்கி வருகிறது; பல காரணங்களை முன்னிட்டு பதிவு வேலை சிறிது தளர்ந்திருக்கிறது எனக் கூறுகிறார்.
மாகாண கமிட்டிகள், நிர்மாண வேலை விருத்தி பற்றி அ.இ.கா.க. காரியாலயத்திற்கு குறிப்பிட்ட காலத்திற்கொரு முறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
தினமணி (20-10-1940)