இந்தியாவில் உள்ள ஆண், பெண் யாவரும், காங்கிரஸ்வாதிகளாயினும், இதரர்களாயினும், போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து வரப்போகும் சுதந்திர தினத்தன்று தேசத்தின் கோடிக்கணக்கான மக்களின் சார்பாக தம்மை அர்ப்பணம் செய்து கொள்ள பிரதிக்ஞை எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது சம்பந்தமாக மகாத்மா காந்தி பிறப்பித்துள்ள தாக்கீதில் மேற்கண்டவாறு கூறுகிறார்.
அவர் மேற்கொண்டு கூறுவதாவது:-
அஹிம்சா பூர்வமான சுயராஜ்யம் என்பது வெறும் அதிகார மாற்றம் அல்ல.கஷ்டப்பட்டு உழைத்தும் பட்டினி கிடக்கும் கோடிக்கணக்கான மக்கள் பொருளாதார அடிமைத்தனத்தினின்றும் பரிபூர்ணமாக மீட்கப்படுவதே அதன் பொருளாக இருக்கவேண்டும்.
சொத்துள்ள சிலர் தம்மை கோடிக்கணக்கான மக்களுடன் ஒன்றுபடுத்திக் கொண்டு, அவர்கள் சார்பாக எந்தவிதமான தியாகத்திற்கும் தயாராக இருப்பதின் மூலமே இது சாத்தியம்.
இந்தத் தினம் சகோதரத் திருநாளாக வேண்டும். அன்று தீண்டாமை நம் இதயத்தை விட்டு அகலவேண்டும்; போதை தரும் பான வகைப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும்; சுயமாக நூற்றல், கிராம கைத்தொழில் பொருள்களை விற்பது அன்றைய தினம் உறுதியாக இருக்கவேண்டும். அன்றைய தினம் சத்யாகிரஹம் கிடையாது. ஏனெனில் நமது கூட்டங்கள், ஊர்வலங்கள், பஜனை கோஷ்டிகளின் மீது குழப்பங்களை வருவித்துக் கொள்ளக்கூடாது.
காலையில் பஜனையும், பிறகு துவஜாரோஹணமும், கொடி வணக்கமும் நடைபெறலாம். மாலையில் பொதுக்கூட்டங்களில் நிறைவடையும் ஊர்வலங்கள் நடத்தப்படலாம்.
பொதுக்கூட்டத்தில் சபைத் தலைவர் சுதந்திரப் பிரக்ஞையை ஷரத்து ஷரத்தாக விளக்க, கூட்டத்துக்கு வந்துள்ளவர்கள், பவித்திரமாக அப் பிரமாணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
தினமணி (12-01-1941)