மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து தானம் பெறப்பட்ட சிறுநீரகம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு பொருத்தி முதலாவதாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மூளைச்சாவு அடைந்தோரின் சிறுநீரகத்தைப் பெறுவதற்கான பதிவுப் பட்டியலில் இந்த மருத்துவமனை இருக்கிறது. இருப்பினும், உடல் உறுப்புகளை எடுத்தல், நரம்பியல் அறுவைச் சிகிச்சை, தீவிர சிகிச்சைப் பிரிவு போன்ற வசதிகள் இல்லாததால் மூளைச்சாவு அடைந்தோரிடம் இருந்து பெறும் சிறுநீரகங்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து ஜூலை 10-இல் தானம் பெறப்பட்ட சிறுநீரகம் வேறு எந்த மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும் பொருந்தவில்லை.
இதனால், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருவள்ளூரைச் சேர்ந்த 42 வயது பெண்ணுக்கு சுமார் 4 மணி நேர அறுவைச் சிகிச்சை செய்து சிறுநீரகம் பொருத்தப்பட்டது. முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்படி, இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது
இதுதொடர்பாக மருத்துவமனையின் சிறுநீரக அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் சரவணன் கூறியது:-
நோயாளியின் காலில் ஏற்பட்டிருந்த சிறிய புண்ணுக்காக அலோபதி மருந்துகளையும், நாட்டு மருந்துகளையும் உட்கொண்டதால் சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டன. பாதிக்கப்பட்ட காலும் அறுவைச்சிகிச்சை செய்து நீக்கப்பட்டது.
இந்த நிலையில் தானம் பெறப்பட்ட சிறுநீரகத்தை இந்தப் பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை செய்து பொருத்தினோம். நோயாளியும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உறவினர்கள் தானம் செய்யும் சிறுநீரத்தை நோயாளிக்கு பொருத்தும் அறுவைச் சிகிச்சை கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று, இதுவரை 50 சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், மூளைச்சாவு அடைந்தவரிடம் தானம் பெறப்பட்ட சிறுநீரகம் பொருத்தப்பட்டது இதுவே முதல்முறையாகும் என்றார்.