இதய நோய் தொடர்பான மரபணு ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையிலான புதிய ஒப்பந்தத்தில் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனை கையெழுத்திட்டுள்ளது. மரபணு அடிப்படையிலான நோயறிதல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான 'மெட்ஜீனோம்' உடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி மாரடைப்பு, நுரையீரல் தமனியில் உயர் ரத்த அழுத்தம், இதய நோயினால் ஏற்படும் திடீர் மரணங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மெட்ஜீனோம் நிறுவனம், கடந்த ஆண்டு இம்மருத்துவமனை வளாகத்தில் மரபணு ஆய்வகம் மற்றும் பரிசோதனை மையம் ஒன்றை நிறுவியது. அதன் தொடர்ச்சியாக இந்த புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
மெட்ஜீனோம் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி டாக்டர் ராம்பிரசாத் கூறுகையில், 'இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகளில் 25 சதவீதம் இதய மற்றும் ரத்தநாள நோய்களால் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண்பதற்கு உயிரியல் மற்றும் சமூகவியல் சார்ந்த காரணங்களைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதற்கு மரபணு ஆராய்ச்சி மிகவும் அவசியம்' என்றார். மருத்துவமனையின் இதயவியல் துறை இயக்குநர் டாக்டர் முல்லாசாரி அஜித் கூறுகையில், 'மக்களின் நலனுக்காக இதுபோன்ற ஒருங்கிணைந்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறோம். நவீன தொழில்ட்பங்களின் உதவியுடன் தரமான சிகிச்சையை அளிக்க இது உதவும்' என்றார்.