இந்திய எலும்பு - மூட்டு தினத்தை முன்னிட்டு, தனியார் மருத்துவமனைகளில் 250 இலவச அறுவை சிகிச்சைகளை தமிழ்நாடு முடநீக்கியல் நிபுணர்கள் சங்கம் மேற்கொள்ள உள்ளது.
இதுதொடர்பாக இச்சங்கத்தின் தலைவர் டாக்டர் எஸ்.ரமேஷ் பாபு சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
இந்திய எலும்பு - மூட்டு தினம் ஆகஸ்ட் 4 -ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு சங்கத்தின் சார்பில் ஜூலை 30 -ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6 -ஆம் வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
முக்கிய நிகழ்வாக, சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் முடநீக்கியல் நிபுணர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சையை அளிக்க உள்ளனர். அறுவை சிகிச்சைக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் வரை அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படும். எலும்பு மற்றும் மூட்டு சார்ந்த எந்தவித அறுவை சிகிச்சையானாலும் இலவசமாக மேற்கொள்ளப்படும்.
கடந்த ஆண்டு 212 இலவசஅறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. நிகழாண்டில் 250 அறுவை சிகிச்சைகள் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, சங்கத்தின் உறுப்பினர்கள் பணியாற்றும் தனியார் மருத்துவமனைகளில், இலவச எலும்பு அடர்த்தி பரிசோதனை முகாம், பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி உள்ளிட்டவையும் நடைபெற உள்ளது என்றார் அவர்.