விடியோ கேம் அடிக்‌ஷன், மிக மோசமான ‘மனநலச் சீர்கேட்டு நோய்’ என உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!

கேமிங் அடிக்‌ஷனால் வேலைகள் தடைபடும் போது தேங்கிப் போகும் வேலைப்பளுவினால் உண்டாகும் மன அழுத்தம், குழப்பம், சதா சர்வ காலமும் கேம் ஆடுவதைத் தவிர வேறு எந்த ஒரு வேலையும் நிம்மதி தராதோ எனும் சஞ்சல உணர்வு
விடியோ கேம் அடிக்‌ஷன், மிக மோசமான ‘மனநலச் சீர்கேட்டு நோய்’ என உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!

மேலை நாடுகளிலுல், இந்தியாவிலும் நாளுக்கு நாள் பெருகி வரும் விடியோ கேம் போதையை மனநலச் சீர்கேட்டு நோயாக வரையறை செய்து அறிவித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம். விடியோ கேம் போதையால் சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் மாத்திரமல்ல தற்போது கையில் இண்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பவர்கள் எவராயினும் கூட வயது வித்யாசமின்றி இந்த போதைக்கு நாளடைவில் அடிமையாகி விடுகிறார்கள். இதனால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதோடு சம்மந்தப்பட்டவர்களின் மனநலனிலும் குறிப்பிடத்தக்க அளவில் நெகட்டிவ்வான விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது இந்த போதை.

முறையற்ற உணவுப் பழக்கம், போதுமான தூக்கமின்மை, சதா தூண்டப்பட்ட விளையாட்டு ஆர்வத்துடனேயே இருப்பதால் வீட்டிலும், வெளியிலும் ஒரு சாதாரண மனிதன் அன்றாடக் கடமைகளைக் கூட மறந்து விடும் போக்கு, நடைமுறைக் கடமைகளைக் நிறைவேற்ற முடியாததால் உண்டாகும் சுய கழிவிரக்கம். கேமிங் அடிக்‌ஷனால் வேலைகள் தடைபடும் போது தேங்கிப் போகும் வேலைப்பளுவினால் உண்டாகும் மன அழுத்தம், குழப்பம், சதா சர்வ காலமும் கேம் ஆடுவதைத் தவிர வேறு எந்த ஒரு வேலையும் நிம்மதி தராதோ எனும் சஞ்சல உணர்வு. இவற்றால் உண்டாகும் சுய கட்டுப்பாடற்ற நிலை. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் கேமிங் அடிக்‌ஷனால் மனித வாழ்வில் நிகழக் கூடிய மாற்றங்களை. இந்த மாற்றங்கள் அனைத்தும் ஒரு கட்டத்தில் மனிதர்களை நட்பால் இணைப்பதற்குப் பதிலாக தனித்தனி தீவுகளாக்கி தனிமைப் புதைகுழிக்குள் தள்ளி விடுவதற்கான வாய்ப்புகளாக மாறி விடுகின்றன என்கிறார்கள் இது குறித்த ஆய்வுகளை முன்னெடுத்து நடத்திய மருத்துவக் குழுவினர்.

உலக மக்கள் தொகையில் 7% பேர் தற்போது இந்நோயின் தீவிர தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். மிக விரைவில் இந்த எண்ணிக்கை பன்மடங்காக வாய்ப்பிருக்கிறது என்கிறது அமெரிக்கன் சைக்கியாட்ரிக் அசோஸியேசன். அவர்கள் வெளியிட்டுள்ள டயக்னாஸ்டிக் & ஸ்டேட்டிக் மேனுவல் ஆஃப் மெண்டல் டிஸார்டர்ஸ் புத்தகத்தின் 4 வது தொகுதி உலகம் முழுவதும் இருக்கும் மனநல ஆலோகர்கள் மற்றும் மருத்துவர்களால் பைபிள் போன்ற விலைமதிக்க முடியாத தகவல் களஞ்சியமாகக் கருதப்படுகிறது. அந்தப் புத்தகம் WHO  அறிவிப்பு வெளிவருவதற்கு வெகி காலத்துக்கு முன்பாகவே கேமிங் அடிக்‌ஷனை மிக மோசமான மனநலச்சீர்க்கேட்டு நோயாகக் குறிப்பிட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டிருந்தது. அதன் நீட்சி தான் இப்போதைய அறிவிப்பு என்கிறார் இண்டியன் சைக்ரியாட்டிக் சொஸைட்டியின் முன்னாள் தலைவரான பிரசாத் ராவ் G.

மேலும் அவர் பேசுகையில், புளூ வேல் போன்ற உயிர் கொல்லி ஆன்லைன் விளையாட்டுக்கள் உலவும் இந்தக் காலத்தில் பெற்றோர் தத்தமது பிள்ளைகளின் இணைய நடவடிக்கைகளை குறைந்தபட்சம் அவர்களது 18 வயது வரையிலாவது தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

SHUT (Service for Healthy use of Technology) அமைப்பின் கூடுதல் இணைப் பேராசியரான மனோஜ் குமார் ஷர்மா, எங்களிடம்.... சைக்கலாஜிகல் மற்றும் நடத்தைக் கோளாறுகளுக்காக சிகிச்சைக்கு வரும் பெரும்பாலானவர்களின் தினசரி நடவடிக்கைகளில் உடல் நல ரீதியாக மட்டுமன்றி மனநல ரீதியாகவும் பெரும் பாதிப்புகளை உண்டாக்குவதில் மிகப்பெரும் பங்கு இந்த ஆன்லைன் விளையாட்டு போதைக்கு உண்டு, அப்படிப்பட்டவர்களை திருத்தி மீண்டும் சரியான பாதைக்கு கொண்டு வருவதில் குடும்பத்தினரின் அக்கறைக்கும் முக்கிய பங்கு உண்டு என்கிறார்.

நேஷனல் மெடிக்கல் ஜர்னல் எனும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டிருக்கும் ‘இளைஞர்களின் வாழ்வில் விடியோ கேம் அடிக்‌ஷன் விளைவுகள்’ (‘Video game addiction: Impact on teenagers)  எனும் தலைப்பிட்ட இவரது கட்டுரையில், அவர் குறிப்பிட்டுள்ளபடி 1990 க்குப் பின்பே இந்தியாவில் விடியோ கேம் போதை அதிகளவில் அதிகரித்துள்ளது எனத் தெரியவருகிறது.

விடியோ கேம் அடிக்‌ஷன் தனிநபர் வாழ்வை சீரழிப்பதோடு அல்லாமல் மனிதர்களது வாழ்க்கமுறை மற்றும் அவர்களது சமுதாயக் கடமைகளிலும் கூடுமான வரை தீமையான தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாகக் கூறுகின்றனர் இந்த மருத்துவர்கள். இளைஞர்களிடையே ஆரோக்யம் சீர்கெடுவது மட்டுமல்ல சகித்துக் கொள்ள முடியாத அளவிலான குறட்டை, மோசமான கொடுங்கனவுகளால் தூக்கம் பாதியில் தடைபடும் நிலை, தூக்கமற்ற நிலையில் பகல்நேர வேலைகளில் சரியாக ஈடுபட முடியாத நிலை. அதனால் உண்டாகும் குற்ற உணர்வு, தாழ்வுணர்ச்சி, மன அழுத்தம், உள்ளிட்ட அத்தனை பிரச்னைக்கும் ஒரே முழுமுதற்காரணமாக விடியோ கேம் போதை விளங்குகின்றது.

இதை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை எனில் நாளடைவில் நிலமை மோசமடைந்து நெகட்டிவ்வான பின்விளைவுகளை ஏற்படுத்து சம்மந்தப்பட்டவர்களின் மொத்த வாழ்வையும் சீர்குலைத்து விடக்கூடிய அபாயம் நிறைந்தவை இத்தைய விளையாட்டுக்கள். என்கிறார்கள் மருத்துவர்கள்.

புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com