மைசூரில் 403-ஆவது தசரா விழா சனிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் சந்திரசேகரகம்பாரா இந்த விழாவைத் தொடக்கிவைத்தார்.
மைசூர் சாமுண்டிமலையில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் காலை 10.44 மணியளவில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, இந்த விழா தொடக்கிவைக்கப்பட்டது.
விழாவில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் சீனிவாஸ் பிரசாத், எச்.சி.மகாதேவப்பா, மகாதேவ பிரசாத், உமாஸ்ரீ, எம்.எல்.ஏ. ஜி.டி.தேவ கெüடா, மைசூர் மாநகராட்சி மேயர் ராஜேஸ்வரி, துணை மேயர் சைலேந்திரா, மாவட்ட ஆட்சியர் சிகா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி, மைசூரில் அமைந்துள்ள சாமுண்டி மலை, பாரம்பரியக் கட்டடங்கள், அரண்மனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், நினைவுச் சின்னங்கள், கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், சதுக்கங்கள், பூங்காக்கள், சாலைகள் ஆகியவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
விழாவின் முதல் நாள் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்ததால் மைசூர் விழாக்கோலம் பூண்டிருந்தது. மக்களிடையே உற்சாக வெள்ளம் கரைபுரண்டோடியது.
திருவிழாக்கள்: தசரா தொடக்க விழாவை முன்னிட்டு, மைசூரில் கிராமியக் கலை விழா, திரைப்பட விழா, உணவு விழா, இளைஞர் விழா, சிறுவர் விழா, மகளிர் விழா, இசை விழா, நடன விழா, தோட்டக்கலை விழா, விளையாட்டுப் போட்டிகள், குஸ்திப் போட்டி, சாகச நிகழ்ச்சிகள், பொருள்காட்சி போன்ற ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.