இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் ஒன்றாக இணைந்து சீனக் கடல் பகுதியில் புதன்கிழமை கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டன.
சீனக் கடற்படையின் 65-வது ஆண்டு விழாவையொட்டி அங்குள்ள குயிங்டோ நகரில் நடைபெற்ற இப்பயிற்சியில் வங்கதேசம், சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா, புரூனே ஆகிய நாடுகளின் கடற்படை வீரர்களும் பங்கேற்றனர்.
இந்திய போர்க் கப்பலான ஐஎன்எஸ் ஷிவாலிக் உள்பட 18 கப்பல்கள், 7 ஹெலிகாப்டர்கள் இப்பயிற்சியில் ஈடுபட்டன.
"கடற்படை பாதுகாப்பு-2014' என்று பெயரிடப்பட்ட இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை சீன ராணுவம் சிறப்பாகச்
செய்திருந்தது.
இந்தப் பயிற்சியின்போது கூட்டாக இணைந்து மீட்பது, கடத்தலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை, சிறிய ரக ஆயுதங்களை கையாள்வது, அவசர காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.