தனியார் வங்கிகளில் பணிபுரியும் அதிகாரிகள் சந்திக்கும் பிரச்னைகளைக் கையாளுவதற்கென புதிதாக, "தனியார் வங்கி அதிகாரிகள் சங்கம்' தொடங்கப்பட்டதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் மும்பையில் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மற்றொரு பிரிவாக "தனியார் வங்கி அதிகாரிகள் சங்கம்' என்ற புதிய அமைப்பு, பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
கோடக் மஹிந்திரா வங்கியில் பணிபுரியும் வெங்கடேஷ் பாபு, இப்புதிய சங்கத்தின் தலைவராகச் செயல்படுவார்.
தனியார் வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். அவர்களின் பிரச்னைகளைத் தீர்த்துவைக்க வங்கி நிர்வாகங்கள் முயற்சிப்பதில்லை.
குறிப்பாக, தனியார் வங்கிகளில் நிரந்தர ஊழியர்களுக்கென உள்ள பணியிடங்களை ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டு நிரப்புவது, வங்கிகளின் தினசரிப் பணிகளை வெளி நிறுவனங்களிடம் ஒப்படைப்பது, நிரந்தப் பணியிடங்களுக்கு ஊழியர்களை நியமிக்காமல் இருப்பது, திறன் ஊக்கத்தொகை வழங்குவதில் உள்ள பாகுபாடு போன்ற பிரச்னைகளை தனியார் வங்கி நிர்வாகங்கள் முறைப்படி தீர்த்து வைப்பதில்லை.
எனவே, இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க வலியுறுத்தி, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அடுத்த மாதம் 2ஆம் தேதி நடத்த உள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் தனியார் வங்கி அதிகாரிகளும் கலந்துகொள்வதென முடிவெடுத்துள்ளனர் என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.