சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது என்று அந்தக் கோயிலின் தலைமை தந்திரி கண்டரரு ராஜீவரு கூறினார். சபரிமலை வழிபாட்டில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்று விவாதம் நடைபெற்று வரும் நிலையில், அவர் இவ்வாறு கூறினார். இதுதொடர்பாக, கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் அவர் வெள்ளிக்கிழமை மேலும் கூறியதாவது: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களை அனுமதிப்பது தொடர்பாக, பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. இதில், மக்களின் நம்பிக்கை முக்கியமானதாகும்; சர்ச்சைகள் அல்ல.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது சிறுமி முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையே தொடர வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கும்போது, பக்தர்களின் நம்பிக்கையையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
அந்தக் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதை நீதிமன்றத்தில் ஏற்கெனவே தெரிவித்து விட்டோம் என்றார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என்று மாநில அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் மீண்டும் வலியுறுத்தியதை அடுத்து, சபரிமலை தலைமை தந்திரி மேற்கண்டவாறு கூறினார்.
சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசு கடந்த 2007-ஆம் தேதி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.