ஒடிஸாவில் பட்டாசு தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
ஒடிஸா மாநிலம், நயாகர் மாவட்டத்தில் தனியார் பட்டாசு தொழிற்சாலை உள்ளது.
இந்த தொழிற்சாலையில் உள்ள வெடிமருந்து உற்பத்திப் பிரிவில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீயானது தொழிற்சாலை முழுவதும் பரவியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். 15 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 5 பேர் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தது.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவோரில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.