கருப்புப் பணத்தை வெளிப்படுத்தும் திட்டத்தின் கீழ் வருமானத்தைப் பதிவு செய்வதற்கான காலக்கெடு, வரும் 30-ஆம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வருமான வரித் துறை செயலர் ஹஸ்முக் அதியா, சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியுள்ளதாவது:
கருப்புப் பணத்தை வெளிப்படுத்தும் திட்டத்தில் மக்கள் பெருமளவில் பங்கேற்று வருவதால், அதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், வருமானத்தை வெளிப்படுத்தும் திட்டம், வரும் 30-ஆம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாது என்று தெளிவாகக் கூற விரும்புகிறோம்.
எனவே, 30-ஆம் தேதிக்குள் தங்களது கருப்புப் பண விவரங்களை பொதுமக்கள் தாக்கல் செய்து, தண்டனை பெறுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அந்தப் பதிவுகளில் ஹஸ்முக் அதியா கூறியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்தத் திட்டத்தில், கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் 45 சதவீத வரியை அபராதத்துடன் செலுத்தி அந்த வருமானத்தைக் கணக்கில் கொண்டு வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் திக்விஜய் சிங் கோவாவில் கூறுகையில், ""ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது அறிவிக்கப்பட்ட கருப்புப் பணம் மன்னிப்பு திட்டத்தின் கீழ் ரூ.30,000 கோடிக்கு கருப்புப் பணம் வெளிக்கொணரப்பட்டது. ஆனால், வெளிநாடுகளில் ரூ.40 லட்சம் கோடிக்கு கருப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடியும் பாஜக தொண்டர்களும் கூறி வந்தாலும் அவற்றை மீட்கவில்லை'' என்று குற்றம்சாட்டினார்.