
இந்தியா மிகப்பெரிய, பன்முகத்தன்மை கொண்ட நாடு, எனவே அதற்கு ஏற்ப 78 அமைச்சர்கள் இருப்பது பெரிய விஷயமல்ல என்று மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.
மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் கூடுதல் பொறுப்பாக இருந்து தகவல், ஒலிபரப்புத் துறை வெங்கய்ய நாயுடுவிடம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, தில்லியில் அமைச்சக கூடுதல் பொறுப்பை புதன்கிழமை ஏற்றுக்கொண்ட பிறகு அருண் ஜேட்லியுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த வெங்கய்ய நாயுடு கூறியதாவது:
மத்திய அமைச்சரவை மாற்றத்துக்கு மக்களிடம் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் கூட இதனை வரவேற்றுள்ளனர். மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 15 சதவீதம் பேர் வரை அமைச்சர்களாக நியமிக்க அரசமைப்புச் சட்டத்தில் இடம் உள்ளது.
இந்தியா மிகப்பெரிய நாடு மட்டுமல்ல, பன்முகத்தன்மை நிறைந்த நாடு. இங்குள்ள பிரச்னைகளுக்கு ஏற்ப மத்திய அரசு அதிக அளவு உழைக்க வேண்டியுள்ளது. எனவே, மத்திய அரசில் 78 அமைச்சர்கள் இருப்பது என்பது அதிகமான எண்ணிக்கையல்ல. மக்களுக்கு முழுமையான பலன் கிடைக்கும் வகையில் அரசு செயல்பட வேண்டும் என்பதை பிரதமர் நரேந்திர மோடி முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளார். இதற்கான திட்டங்களை நிறைவேற்ற முழுமையான ஒருங்கிணைப்பும், கண்காணிப்பும் தேவைப்படுகிறது. எனவேதான், புதிதாக பல அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர்களின் துறைகளை மாற்றுவது என்பது பிரதமரின் தனிப்பட்ட உரிமை. துறை மாற்றத்தால் யாருக்கும் மனவருத்தம் ஏற்பட்டுள்ளதாக எனக்குத் தெரியவில்லை. நாட்டு மக்களின் நம்பிக்கையாக பிரதமர் உள்ளார். நீண்டநாள்களுக்குப் பிறகு நிலையான அரசு, வலுவான தலைமையும் நாட்டுக்குக் கிடைத்துள்ளது என்றார் வெங்கய்ய நாயுடு.