பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு வானொலியில் மன் கி பாத் நிகழ்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் வரும் செப்டம்பர் 30-ந்தேதிக்குள் கணக்கில் காட்டாத பணம் பற்றிய விவரங்களை தெரிவிக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் அதுகுறித்து அவர் பேசும் போது கணக்கில் காட்டாத பணம், சொத்து வைத்திருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து அதுபற்றிய தகவல்களை தெரிவித்து அதற்கான அபராதத்தை செலுத்த கடைசி வாய்ப்பை வழங்குகிறோம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தாங்களாக முன்வந்து தங்கள் வருமானம் மற்றும் சொத்துக்கள் குறித்த விவரங்களை அரசிடம் தெரியப்படுத்திக் கொண்டால் தேவையில்லாத சிக்கல்களுக்கு ஆளாகாமல் இருக்கலாம்.
இவ்வாறு தானாக முன்வந்து கணக்கில் காட்டாத பணத்துக்கு அபராதம் செலுத்துபவர்களிடம் அவர்களுக்கு பணம் எப்படி வந்தது, சொத்து எப்படிச் சேர்ந்தது? என்பது போன்ற கேள்விகள், விசாரணைகள் எதுவும் இருக்காது என்று உறுதியாக கூறுகிறேன்.
அதனால்தான் இதை வெளிப்படையான நடைமுறையில் பங்கேற்பதற்கு இது உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு என்று சொல்கிறேன். எனவே நாட்டு மக்கள் அனைவருக்கும், செப்டம்பர் 30-ந்தேதி என்பதுதான் கடைசி வாய்ப்பு.
பா.ஜனதா எம்.பி.க்கள் இந்த விதிமுறைக்கு கட்டுப்படாமல் போய் செப்டம்பர் 30-ந் தேதிக்கு பிறகு கணக்கில் காட்டாத பணம், சொத்து போன்றவற்றில் ஏதாவது பிரச்சினையை எதிர்கொள்ள நேர்ந்தால் அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவி கிடைக்காது.
பெரிய பங்களாக்களில் வாழும் மக்கள் ஆண்டுக்கு ரூ 50 லட்சத்திற்கு குறைவான வருமானத்தை கொண்டிருக்க முடியாது என்றார்.