புதுதில்லி: 2ஜி வழக்கில் சி.பி.ஐயால் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட, பிரபல தொழில் அதிபர் சஞ்ஜய் சந்திராவை பணமோசடி வழக்கில் தில்லி போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
நாட்டின் தலைநகரான தில்லி அருகில் உள்ள நொய்டாவில் பொதுமக்களுக்கு தேவையான அடுக்குமாடி குடியிப்புகளை கட்டி விற்பனை செய்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருபவர் சஞ்ஜய் சந்திரா.
ஆனால், அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட வீடுகளை குறித்த காலத்திற்குள் கட்டிமுடித்து வழங்கவில்லை என்றும், வட்டி என்ற பெயரில் பலமுறை கூடுதல்தொகை வசூலிக்கப்பட்டது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில், சஞ்ஜய் மற்றும் அவரது சகோதரர் அஜய் சந்திரா ஆகிய இருவர் மீது தில்லி போலீஸாக் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், பாட்டியலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.
2ஜி வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராஜா, திமுக தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி ஆகியோருடன் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட, யூனிடெக் நிறுவனத்தின் தலைவர் சஞ்ஜய் சந்திரா 8 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது.