மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய 100 மனிதர்களுக்கான 'டைம்' பத்திரிகையின் பட்டியலில், மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் இடம் பெற்றுள்ளது.
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் 'டைம்' இதழ், மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய உலகின் தலைசிறந்த 100 மனிதர்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான அந்தப் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் இடம் பெற்றுள்ளது.
ஏற்கெனவே, கடந்த 2015-ஆம் ஆண்டு தாக்கத்தை ஏற்படுத்திய 100 மனிதர்களில் ஒருவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும், கடந்த ஆண்டுக்கான டைம் பத்திரிகையின் இணையதள வாக்கெடுப்பில் மோடியின் பெயர் இடம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டுக்கான பட்டியலில் நரேந்திர மோடியின் பெயருடன், எழுத்தாளர் பங்கஜ் மிஸ்ரா எழுதியுள்ள அறிமுகக் குறிப்பில், 'சர்ச்சைக்குரிய டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே, முஸ்லிம்கள் படுகொலையில் தொடர்புடையவர் என்று விமர்சிக்கப்பட்ட மோடி, மக்களின் ஆதரவுடன் இந்தியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோடியைத் தவிர, மின்னணு பணப் பரிமாற்ற சேவையளிக்கும் 'பே-டைம்' நிறுவனத்தை உருவாக்கிய விஜய சேகர் சர்மா இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இந்த இருவர் மட்டுமே இந்த ஆண்டுக்கான 'தாக்கத்தை ஏற்படுத்திய 100 பேர்' பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஆகியோரின் பெயர்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.