ஜம்மு: பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வரும் 29-ஆம் தேதி வருகை தரவிருக்கும் நிலையில், அந்த மாநிலத்தில் தற்போது நிலவும் சூழல் குறித்து ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) - பாஜக கூட்டணி முக்கிய ஆலோசனை நடத்தியது.
இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வருவதாக கூறப்படும் சூழலில், மேற்கண்ட ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஜம்முவிலுள்ள பாஜக தலைமையகத்தில் சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில், பாஜக தேசிய பொதுச் செயலர் ராம் மாதவ், தேசிய துணைத் தலைவர் அவிநாஷ் ராய் கன்னா, பிடிபி மூத்த தலைவரும் மாநில அமைச்சருமான ஹசீப் திரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறிது நேரத்துக்கு பின்னர், மாநில காவல்துறை தலைமை இயக்குநர் எஸ்.பி.வைத்தும் கூட்டத்தில் இணைந்துகொண்டார். செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
கூட்டத்துக்கு பின், அவிநாஷ் ராய் கன்னா செய்தியாளர்களிடம் கூறுகையில், மாநிலத்தில் தற்போது நிலவி வரும் சூழல் குறித்தும், அமித் ஷா வருகைக்கான ஏற்பாடுகள் குறித்தும் விவாதித்ததாக கூறினார்.
இதனிடையே, காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அங்குள்ள கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.