அடுத்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்குத் தகுதியான நபர்களின் பெயர்களை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை பொதுமக்கள் பரிந்துரைக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், குடிமைப் பணி, வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வருகிற 2018-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு தகுதியான நபர்களின் பெயர்கள் வரவேற்கப்படுகின்றன. அத்தகைய நபர்களின் பெயர்களை பொதுமக்கள் அரசுக்கு பரிந்துரைக்கலாம். இதற்காக, மத்திய உள்துறை அமைச்சகம் புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.www.padmaawards.gov.in என்ற அந்த இணையதள முகவரியில் சென்று பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை செப்டம்பர் 15-ஆம் தேதி வரை வழங்கலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பத்ம விருதுகளுக்கான பெயர்களை பொதுமக்களே பரிந்துரைக்கும் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.