சுற்றுலாப் பயணிகள் அளித்த மதிப்பீட்டின் அடிப்படையில், சிறந்த உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலை, முன்னணி சுற்றுலா ஆலோசனை இணையதளமான 'டிரிப் அட்வைஸர்' வெளியிட்டுள்ளது. அதில், தாஜ்மஹால் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தில் கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோயில் உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், 1632 முதல் 1653 வரையிலான காலகட்டத்தில் முகலாய பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்டதாகும். மனைவி மும்தாஜின் நினைவாக ஷாஜஹான் இதனைக் கட்டியதால், காதலின் சின்னமாக புகழப்படுகிறது. முழுவதும் பளிங்கு கற்களால் கட்டப்பட்ட தாஜ்மஹால், உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு, ஆண்டுதோறும் சுமார் 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
இத்தனை சிறப்புகள் கொண்ட தாஜ்மஹாலை, உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ கடந்த 1983-ஆம் ஆண்டில் அறிவித்தது.
இந்நிலையில், முன்னணி சுற்றுலா ஆலோசனை இணையதளமான 'டிரிப் அட்வைஸர்', சர்வதேச அளவில் சிறந்த உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் அளித்த மதிப்பீட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இப்பட்டியலில், தாஜ்மஹால் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. தங்களை மிகவும் வசீகரித்த சுற்றுலாத் தலமாக, தாஜ்மஹாலை சுற்றுலாப் பயணிகள் குறிப்பிட்டுள்ளனர். அந்த பட்டியலில், கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோயில் முதலிடம் பிடித்துள்ளது. கட்டடக் கலை, வரலாற்றின் அடிப்படையில் அங்கோர் வாட் ஈடுஇணையற்றது என்று சுற்றுலா பயணிகள் குறிப்பிட்டுள்ளதாக டிரிப் அட்வைஸர் இணையதளம் தெரிவித்துள்ளது.
இப்பட்டியலில், சீனப் பெருஞ்சுவர், இஸ்ரேலில் உள்ள பழமையான நகரமான ஜெருசலேம், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள வரலாற்றுச் சின்னங்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.