திருமலையில் உள்ள தனியார் உணவகத்தில் பரிமாறப்பட்ட சாம்பாரில் பல்லி இறந்து கிடந்ததையடுத்து அந்த ஹோட்டலுக்கு தேவஸ்தான ஊழல் தடுப்பு போலீஸார் சீல் வைத்தனர்.
திருமலையில் ஏழுமலையான் கோயில் எதிரில் உள்ள தனியார் உணவகத்தில் வியாழக்கிழமை காலை தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத்தை சேர்ந்த பக்தர்கள் 9 பேர் சாப்பிடச் சென்றனர்.
அப்போது சிற்றுண்டிக்கு பரிமாறிய சாம்பாரில் பல்லி இறந்து கிடைந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேவஸ்தான கண்காணிப்புக் காவலர்கள் அங்கு சென்றனர். அதற்குள் உணவக ஊழியர்கள் பல்லி விழுந்த சாம்பாரை கீழே கொட்டி விட்டதாகக் கூறப்படுகிறது.
அதனால் சாம்பார் மாதிரியை அவர்களால் பெற முடியவில்லை. இதையடுத்து அந்த உணவகத்தை மூடி ஊழல் தடுப்பு போலீஸார் சீல் வைத்தனர்.
மேலும் பல்லி விழுந்த சாம்பாரை சாப்பிட்ட அனைவரையும் அஸ்வினி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.