சொகுசு காருக்காக வரி ஏய்ப்பு செய்த வழக்கு: முன்ஜாமீன் கோரி நடிகர் சுரேஷ் கோபி மனு
நடிகரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுரேஷ் கோபி தாம் வாங்கிய சொகுசு காருக்கு வரி ஏய்ப்பு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கேரள உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
சுரேஷ் கோபி அண்மையில் புதுவை மாநிலத்தில் வசிப்பது போன்ற போலியான ஆவணங்களைக் காட்டி சொகுசு கார் ஒன்றைப் பதிவு செய்துள்ளதாக கேரள காவல்துறை கடந்த 5-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தது. இந்த சொகுசு காரை வாங்கியதில் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக போலீஸார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏனெனில், கேரளத்தில் ரூ.20 லட்சத்துக்கும் அதிகமான விலை கொண்ட கார்களை வாங்கினால் 20 சதவவீத வரியைச் செலுத்தியாக வேண்டும். அதைத் தவிர்க்கவே சுரேஷ் கோபி, புதுவையில் கார் வாங்கியதாக வழக்கில் போலீஸார் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வழக்கு திருவனந்தபுரம் முதன்மை ஜுடீஷியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் போலீஸார் தன்னைக் கைது செய்யாமல் இருப்பதற்காக தனக்கு முன்ஜாமீன் அளிக்குமாறு கோரி சுரேஷ் கோபி செவ்வாய்க்கிழமை மனுத் தாக்கல் செய்தார். அதில் அவர்கூறியிருப்பதாவது:
நான் புதுவையில் ஒரு இடத்தை வாடகைக்கு விட்டிருப்பதால் அங்கு எனது இரு வாகனங்களைப் பதிவுசெய்ய முடிவு செய்தேன். அங்கு எனக்கு விவசாய நிலம் இருக்கிறது. அதை எனது சகோதரர்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர்.
எனவே நான் போலியான ஆவணங்களை அளித்து வாகனங்களைப் பதிவு செய்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை. இந்தக் குற்றச்சாட்டுகள் எனக்குப் பெரிய அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் இந்த வழக்கில் நான் கைது செய்யப்பட்டால் எனக்கு அவமதிப்பு மேலும் அதிகரிக்கும்.
என் மீதான வழக்கைப் பொறுத்தவரை அதன் புலன்விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் அளிக்கத் தயாராக இருக்கிறேன். விசாரணைக்குழு விரும்பும்போது என்னிடம் எப்போதும் விசாரணை நடத்தலாம். எனவே எனக்கு முன் ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும் என்று சுரேஷ் கோபி தனது மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.