அகர்தலா: நாட்டில் அடிப்படை கல்வியின் தரம் மிகவும் மோசமடைந்து வருவதால், அடுத்த கல்வி ஆண்டு முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்தார்.
கல்வி உரிமை சட்டம்-2009-ன் படி 8-ஆம் வகுப்புவரை எந்த மாணவ, மாணவியையும் ‘தேர்ச்சி பெறவில்லை’ என்று நிறுத்தி வைக்கவோ அல்லது பள்ளியை விட்டு வெளியேற்றவோ கூடாது என்று கூறுகிறது. இதன்படி, 8-ம் வகுப்புவரை, அனைத்து மாணவ, மாணவிகளும் ‘அனைவரும் தேர்ச்சி’ செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்தார்.
திரிபுரா மாநில தலைநகர் அகர்தலாவில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘அனைவரும் தேர்ச்சி’ திட்டத்தால், நாட்டில் அடிப்படை கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக பெரும்பாலான மாநிலங்கள் முறையிட்டுள்ளன. எனவே, கல்வி உரிமை சட்டத்தில் இருந்து, அடுத்த கல்வி ஆண்டு முதல், ‘அனைவரும் தேர்ச்சி’ திட்டத்தை திரும்ப பெறுவது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் 20 பல்கலைக்கழகங்களை உலகளாவிய தரத்திற்கு மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளதை அடுத்து, அந்த திசையில் அமைச்சகம் வேலை செய்வதற்கும் முடிவு செய்துள்ளது.
இரண்டு நாள் பயணமாக வந்த பாண்டே, சமஸ்கிருத கல்வி நிறுவனம் மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் ஆகியற்றுக்கு சென்று பார்வையிட்டார். பொறியியல் நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான ஆதரவை நீட்டிப்பதற்கும் அவர் உறுதியளித்தார்.
இடதுசாரி அரசியலில் பாஜக வளர்ந்து வருவதாக மகிழ்ச்சி தெரிவித்த பாண்டே, "திரிபுராவில் 2018 சட்டப்பேரவை தேர்தலில் பிஜேபி புதிய மாற்றத்தை தரும் என்று நம்புவதாக கூறினார்.