தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்மா இ- கிராமம் தேர்வு செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
சட்டப் பேரவையில் விதி 110- ன் கீழ், அவர் வெள்ளிக்கிழமை படித்தளித்த அறிக்கை:
தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் முதல் நிலையில் மாநில தலைநகரத்துடன் மாவட்ட தலைநகரங்களும், இரண்டாம் நிலையில் மாவட்ட தலைநகரங்களுடன் வருவாய்க் கோட்ட அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் கட்ட செயல்பாடுகள் 5 ஆண்டு காலத்துக்கு ரூ.437.96 கோடியில் செயல்படுத்தப்படும்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்மா இ- கிராமம் என ஒரு கிராமம் தேர்வு செய்யப்படும். அந்த கிராமத்துக்கு தகவல் தொழில்நுட்பவியல் வசதியைக் கொண்ட கம்பியில்லாத இணைய இணைப்பு, திறன்மிகு தெரு விளக்குகள், தொலைக்கல்வி, தொலை மருத்துவம் போன்ற சேவைகள் அளிக்கப்படும்.
தமிழக அரசின் பல்வேறு சேவைகளை இணையம் மூலம் பெறவும், நகர்ப்புற பகுதிகளிலும் கண்ணாடி இழை நெட்வொர்க் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் 'தமிழ்நெட்' என அழைக்கப்படும்.
வீட்டு மனைகள்: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பினருக்கு விலையில்லாத வீட்டுமனைகள், தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின்கீழ் அதிக பயனாளிகள் பயன் அடையும் வகையில் இப்போதுள்ள கிராமப்புற, நகர்ப்புற பயனாளிகளின் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரமாக உயர்த்தப்படும்.
கிராமப்புற பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவியர்களின் பெற்றோரது ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றார் முதல்வர்.