முந்தைய சமாஜவாதி அரசில் கொண்டுவரப்பட்ட பயனற்ற திட்டங்களுக்கு செல்லும் நிதி நிறுத்தப்பட்டது என்று உத்தரப் பிரதேச வேளாண் துறை அமைச்சர் சூர்ய பிரதாப் சாஹி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
முந்தைய சமாஜவாதி அரசில் கொண்டுவரப்பட்ட பயனற்ற திட்டங்களுக்கு செல்லும் நிதி நிறுத்தப்பட்டுவிட்டது. அந்த நிதி அனைத்தும் ரூ.36ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடிக்குப் பயன்படுத்திக் கொள்ளப்படும். விவசாயிகளின் தேவைகளை அறிந்து உத்தரப் பிரதேச அரசு செயல்பட்டு வருகிறது. அவர்களுடைய நிலையையும், வருவாயையும் உயர்த்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. நிகழாண்டில் வேளாண் துறைக்கு ரூ.67,682 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதுவரை வேளாண் துறைக்காக ஒதுக்கப்பட்ட அதிக தொகை இதுவே ஆகும். முந்தைய அரசு ரூ.29,771 கோடியை வேளாண் துறைக்காக ஒதுக்கியிருந்தது என்று சூர்ய பிரதாப் சாஹி தெரிவித்தார்.