ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்புக்கு ஆயுதங்களைக் கடத்தியதாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் காவல் துறை ஐ.ஜி. முனீர் கான் கூறியதாவது:
லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்புக்காக ஜம்மு-காஷ்மீரின் வடக்குப் பகுதியில் இருந்து தெற்கு பகுதிக்கு ஆயுதங்களும், வெடிப்பொருள்களும் வாகனம் ஒன்றின் மூலம் கடத்திச் செல்லப்பட்டதாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த வாகனத்தைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டோம். சில தினங்களுக்கு பின் அந்த வாகனத்தைக் கண்டறிந்தோம். ஆனால், வாகனத்தில் யாரும் இல்லை. இதையடுத்து, வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டோம். அதன்மூலம், 4 பேரைக் கைது செய்தோம். அந்த வாகனத்தில் துப்பாக்கியும், பயங்கரவாத கொள்கைகள் அடங்கிய இதழ்களும் இருந்தன. கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்று முனீர் கான் தெரிவித்தார்.