மும்பை தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த பாகிஸ்தான் பயங்கரவாதத் தலைவர் ஹஃபீஸ் சயீதின் வீட்டுக் காவல் தொடர்பான வழக்கில் லாகூர் உயர் நீதிமன்றம் ஜூலை 3-ஆம் தேதி தீர்ப்பளிக்க உள்ளது.
பாகிஸ்தான் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி ஹஃபீஸ் மற்றும் அவரது கூட்டாளிகளை அந்நாட்டின் பஞ்சாப் மாகாண அரசு கடந்த ஜனவரி மாதம் முதல் வீட்டுக் காவலில் வைத்துள்ளது. தங்களை வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்க வேண்டுமென்று கோரி ஹஃபீஸ் உள்ளிட்ட 5 பேரும் லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, இந்த வழக்கில் ஜூலை 3-ஆம் தேதி தீர்ப்பை அறிவிப்பதாக நீதிமன்றம் கூறிவிட்டது.
முன்னதாக, நீதிமன்றத்தின் ஆய்வுக் குழுவின் முன்பு கடந்த மாதம் ஆஜரான ஹஃபீஸ், தானும், தனது சகாக்களும் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பக் கூடாது என்ற காரணத்துக்காகவே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால், புனிதப்போர் என்ற பெயரில் ஹஃபீஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் அரசுத் தரப்பு குற்றம்சாட்டியது.
மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டில் பயங்கரவாதிகள் புகுந்து தாக்கிய சம்பவத்தில் ஹஃபீஸ் முக்கியக் குற்றவாளியாவார். அவரை இந்தியாவும், அமெரிக்காவும் தேடப்படும் பயங்கரவாதியாக ஏற்கெனவே அறிவித்துள்ளன.