சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறித்து வர்த்தகர்களுக்கு விளக்கமளிப்பதற்காக, நாடு முழுவதும் 100 விழிப்புணர்வு மையங்களை அமைக்க அகில இந்திய வர்த்தக சம்மேளனம் (சிஏஐடி) முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை குறித்து வர்த்தகர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்தியா முழுவதும் 100 விழிப்புணர்வு மையங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம்.
இதற்காக, சுமார் 6 கோடி வர்த்தகர்களைச் சென்றடையும் வகையில் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, டாலி சொல்யூஷன்ஸ், மாஸ்டர்கார்ட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறோம்.
முதல்கட்டமாக, அடுத்த மாதம் (ஜூலை) 1-ஆம் தேதி முதல் விழிப்புணர்வு முகாம்கள் செயல்படத் தொடங்கும். தற்போதைய வரி விதிப்பு முறையிலிருந்து, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு சுலமாக மாறுவதற்கான வழிமுறைகள் இந்த விழிப்புணர்வு மையங்களில் வர்த்தகர்களுக்கு சொல்லித் தரப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.