அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி
அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக புலனாய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய ராணுவம், சிஆர்பிஎஃப், ஜம்மு-காஷ்மீர் மாநில காவல்துறையில் டிஐஜி நிலையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு புலனாய்வுத் துறையின் காஷ்மீர் பிராந்திய ஐ.ஜி.பி. முனீர்கான் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
புலனாய்வுத் துறைக்கு அனந்த்நாக் பிராந்திய காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் தகவல் அனுப்பியுள்ளார். அதில் அவர், அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாகவும், யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்கள் 100 முதல் 150 பேர் வரையிலும், காவல்துறை அதிகாரிகள் 100 பேரையும் கொலை செய்ய பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
யாத்திரை செல்லும் பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தவும் வாய்ப்புள்ளது. இதுபோல தாக்குதல் நடத்துவதன் மூலம், நாட்டு மக்களிடையே மதரீதியிலான பதற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று பயங்கரவாதிகள் கருதுகின்றனர். இதனால் அமர்நாத் யாத்திரை செல்லும் வழித்தடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் அனைவரும் உஷாராக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகத்தில் கசிவு: இதனிடையே, புலனாய்வுத் துறை ஐ.ஜி.பி. முனீர்கானின் கடிதத்தின் நகல், ஸ்ரீநகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் படைப்பிரிவின் தலைமையகத்துக்கும் அனுப்பப்பட்டிருந்தது. அந்த நகல் எதிர்பாராதவிதமாக சமூக ஊடகத்திலும், வாட்ஸ் அஃப் போன்ற செல்லிடப்பேசி செயலியிலும் கசிய விடப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரை புதன்கிழமை தொடக்கம்: இமயமலையின் தென்பகுதியிலுள்ள அமர்நாத் குகைக்கோயிலில் இருக்கும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுதோறும் யாத்திரை செல்வார்கள். கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை 48 நாள்கள் நடைபெற்றது. ஆனால், நிகழாண்டில் அமர்நாத் யாத்திரை 40 நாள்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிகழாண்டுக்கான அமர்நாத் யாத்திரை புதன்கிழமை (ஜூன் 28) தொடங்கவுள்ளது.
இதையொட்டி, பகல்காம், காந்தர்பால் ஆகிய இடங்களில் இருக்கும் 2 முகாம்களில் இருந்து 4 ஆயிரம் பக்தர்கள் யாத்திரை புறப்பட்டுச் செல்லவுள்ளனர். இதை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் துணை முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார். இதையொட்டி, யாத்ரீகர்கள் செல்லும் வழித்தடங்களில், மாநில காவல்துறையினர், ராணுவம், பிஎஸ்எஃப், சிஆர்பிஎஃப் வீரர்கள் உள்பட சுமார் 40 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.