உத்தரப் பிரதேச மாநிலம், லகிம்பூர் கேரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த ஆயுதத் தொழிற்சாலையை கண்டறிந்து போலீஸார் சீல் வைத்தனர். இதுதொடர்பாக 3 பேரை அவர்கள் கைது செய்தனர்.
இதுகுறித்து லகிம்பூர் கேரி மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் எஸ்.சன்னப்பா கூறியதாவது:
தௌராஹர் கோத்வாலி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் பாய்ந்தோடும் கக்ரா ஆற்றையொட்டி சட்டவிரோதமாக ஆயுதத் தொழிற்சாலை இயங்கி வருவதாக ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அந்தப் பகுதியில் வியாழக்கிழமை இரவு தனிப்படை அனுப்பி வைக்கப்பட்டது. சட்டவிரோதமாக இயங்கிவந்த அந்த தொழிற்சாலையை அவர்கள் கண்டறிந்தனர். அப்போது அங்கிருந்த 7 நாட்டுத் துப்பாக்கிகள், துப்பாக்கிகளைத் தயாரிப்பதற்கான பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதில் சம்பந்தப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் சன்னப்பா.