மத்தியில் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மக்களுக்கு நல்லாட்சியை வழங்கத் தவறிவிட்டது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக, அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருப்பதாவது:
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு, மக்களுக்கு நல்லாட்சி வழங்கத் தவறிவிட்டது. மாறாக, மக்களிடையே பிரிவினையையும், அவர்களுக்கு இடையூறையும் கொடுத்து வருகிறது.
மேலும், மக்களிடையே கோபத்தையும், வெறுப்பையும் மத்திய அரசு விதைத்து வருகிறது. அவற்றால் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடாது. அதுமட்டுமன்றி, அவர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்துவிடாது என்று ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மத்தியில் மூன்று ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்ததை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் கொண்டாடி வரும் நிலையில், ராகுல் காந்தி இந்தக் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.