கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள இந்தியா வர விண்ணப்பித்திருத்த பாகிஸ்தானியருக்கு மருத்துவ விசா அளிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஒப்புதல் அளித்துள்ளார்.
பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்தவர் முகமது தல்ஹா. இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பாக சுஷ்மா ஸ்வராஜுக்கு சுட்டுரை (டுவிட்டர்) வாயிலாக ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தார். அதாவது, அவரது தந்தை சமீம் அகமதுவுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக இந்தியா வர வேண்டியிருப்பதால் அதற்கான விசாவை விரைந்து வழங்க உதவுமாறு அதில் அவர் தெரிவித்திருந்தார்.
தல்ஹாவின் கோரிக்கையைப் பரிசீலித்த சுஷ்மா, அவரது தந்தைக்கு மருத்துவ விசா அளிக்க ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து விரைவில் அவர்களுக்கு இந்தியத் தூதரகம் சார்பில் விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவல்களை சுஷ்மா ஸ்வராஜ், தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் மத்திய அரசு இத்தகைய உதவிகளை அந்நாட்டினருக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.