மஹாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் பிரசித்தி பெற்ற சாய்பாபா திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு நாளொன்றுக்கு அவரது பக்தர்களும், பொதுமக்களும் சுமார் 60,000 பேர் வந்து செல்கின்றனர். இதுவரை அங்கு விமான சேவைகள் எதுவும் இல்லை.
இதன் காரணமாக, புணே அல்லது மும்பை வரை விமானத்தில் பயணித்து, அதன் பிறகு தரைவழி மார்க்கமாக ஷீரடி வரும் நிலை இருந்து வருகிறது. இந்த சூழலில், அங்கு புதிதாக விமான நிலையம் அமைக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளை எம்ஏடிசி மேற்கொண்டு வந்தது.
சுமார் 2,750 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.350 கோடி செலவில் அப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது பயன்பாட்டுக்குத் தயாராகியுள்ளது.
கடந்த சில தினங்களாக சோதனை ஓட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், வரும் அக்டோபர் 1-ந் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விமான நிலையத்தை திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, ஷீரடி சாய்பாபா சமாதி நிலையை அடைந்து நூறாண்டு ஆகிறது. இதனை சிறப்பாக கொண்டாட கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
நிகழ்ச்சிகள் அக்டோபர் 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்குச் சென்று வழிபட்டார். பின்னர் அங்கு புதிதாக கட்டப்பட்ட விமானநிலையத்தை திறந்து வைத்தார்.