சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்தும் முடிவை நான் மட்டும் தனியாக எடுக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்துள்ளார்.
தனது சொந்த மாநிலமான குஜராத்தின் காந்திநகரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஜிஎஸ்டியை அமல்படுத்த வேண்டும் என்ற முடிவை, பிரதமர் என்ற முறையில் நான் மட்டும் தனியாக எடுக்கவில்லை. 30-க்கும் மேற்பட்ட பல்வேறு தரப்புடன் ஆலோசனை நடத்திதான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி குறித்து தேவையற்ற பொய் பிரசாரத்தை காங்கிரஸ் மேற்கொள்ளக் கூடாது. ஏனெனில், இந்தியாவில் ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் காங்கிரஸ் கட்சிக்கும் சமபங்கு உண்டு.
ஜிஎஸ்டி-யின் முக்கிய அம்சங்களை வடிவமைத்தலில் அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பங்கு உள்ளது. ஜிஎஸ்டி குறித்து எழும் கருத்துகளை கவனமாக ஆய்வு செய்து, அதற்கு ஏற்ப மாற்றங்களையும் மேற்கொண்டு வருகிறோம் என்றார் மோடி.
முன்னதாக, பிரதமர் மோடி தன்னிச்சையாக மேற்கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ், ஜிஎஸ்டி அமல் ஆகிய நடவடிக்கைகளால்தான் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
அதே நேரத்தில் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் கருப்புப் பணம் பெருமளவில் ஒழிக்கப்பட்டுள்ளது என்றும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் தொடக்கத்தில் சிறிய பிரச்னைகள் ஏற்பட்டாலும், நீண்ட காலத்தில் சிறப்பான பலன் கிடைக்கும் என்று மத்திய அரசு தரப்பில் தொடர்ந்து விளக்கமளிக்கப்பட்டு வருகிறது.