பெங்களூரில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் 2 மாடி கட்டடம் சரிந்து விழுந்ததில், இடிபாடுகளிடையே சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் காயமடைந்தனர்.
பெங்களூரு ஈஜிப்புரா பன்னப்பா லேஅவுட் 7-வது குறுக்குச் சாலையில் உள்ள 2 மாடி கட்டடத்தில், சமையல் எரிவாயு உருளை திங்கள்கிழமை காலை வெடித்தது.
இதில் 2 மாடி கட்டடம் சரிந்து விழுந்தது. இதில் ஏற்பட்ட இடிபாடுகளுக்கிடையே அங்கு வசித்து வந்தோர் பலர் சிக்கினர்.
தகவலின்பேரில், தீயணைப்புப் படை வீரர்களும், போலீஸாரும் அங்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதில், 8 மாத கர்ப்பிணியான அஸ்வினி (22), ரவிசந்திரன் (30), கலாவதி (68), ஹரிபிரசாத், பவன், கல்யாண், மாலாஸ்ரீ ஆகிய 7 பேரும் பலத்த காயமடைந்து, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சஞ்சனா (3) உள்ளிட்ட 7 பேர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்தை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, மேயர் சம்பத்ராஜ், மாநகரக் காவல் ஆணையர் சுனில்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
இதையடுத்து, ராமலிங்க ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், '2 மாடி கட்டடம் சரிந்து விழுந்தது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்' என்றார்.
இதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.