மியான்மரில் உள்ள காளி கோயிலில் பிரதமர் மோடி வியாழக்கிழமை பூஜை நடத்தி வழிபாடு மேற்கொண்டார்.
முகலாயர்களின் கடைசி மன்னர் பகதூர் ஷா சஃபாரின் நினைவிடம், 2500 ஆண்டுகள் பழமையான பௌத்த மத புனித தலமான ஸ்வேதகான் பகோடாவுக்கும் அவர் சென்றார்.
3 நாள் பயணமாக மியான்மருக்கு சென்றுள்ள மோடி தனது பயணத்தின் கடைசி நாளான வியாழக்
கிழமை யாங்கூன் நகரில் உள்ள காளி கோயிலுக்கு சென்றார். அங்கு தீப ஆராதனை செய்து மோடி வழிபட்டார்.
தொடர்ந்து மியான்மரின் கலாசாரத் தொன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பௌத்த மத புனிதத் தலமான ஸ்வேதகான் பகோடாவுக்கு மோடி சென்றார். அங்கு போதி மரம் ஒன்றையும் மோடி நட்டார். ஸ்வேதகான் பகோடாவில் உள்ள கோயிலில் நூற்றுக்கணக்கான தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. கோயிலின் உச்சிப் பகுதி 4,531 வைரக் கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து போக்யோ அங் சான் அருங்காட்சியகத்துக்கும் மோடி சென்றார். அப்போது மியான்மரின் ஜனநாயகத்துக்கான தேசியத் தலைவர் ஆங் சான் சூகியும் உடன் சென்றார்.
பின்னர், முகலாய வம்சத்தின் கடைசி மன்னரான பகதூர் ஷா
நினைவிடத்துக்கு மோடி சென்று மலரஞ்சலி செலுத்தினார். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பகதூர் ஷா தில்லியில் இருந்து மியான்மருக்கு நாடு கடத்தப்பட்டு, அங்கே தனது 87-ஆவது வயதில் உயிரிழந்தார். இந்தியாவை சுமார் 3 நூற்றாண்டுகள் ஆண்டு வந்த முகலாயர் ஆட்சி பகதூர் ஷாவுடன் முடிவுக்கு வந்தது. முன்னதாக, புதன்கிழமை மியான்மரின் பகான் நகரில் உள்ள 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆனந்தா கோயிலுக்கு மோடி சென்றார். இந்த கோயில் இந்தியாவின் நிதியுதவியுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குச் சென்றது குறித்து தனது மகிழ்ச்சியையும், அது தொடர்பான புகைப்படங்களையும் மோடி, சுட்டுரையில் (டுவிட்டர்) பகிர்ந்து கொண்டுள்ளார்.