உத்தரப் பிரதேச மாநிலத்தில் புளூவேல் விளையாட்டில் ஈடுபட்ட 14 வயது சிறுவன் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
லக்னௌவில் உள்ள இந்திரா நகரைச் சேர்ந்த ஆதித்ய வர்தன் என்ற அந்த சிறுவன், கடந்த 2 வாரங்களாக தனது செல்லிடப்பேசியில் புளூவேல் விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது மிகவும் பதற்றத்துடன் அவர் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தனது அறையில் அவர் வியாழக்கிழமை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து உத்தரப் பிரதேச மாநில போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, புளூவேல் விளையாட்டுக்குத் தடை விதிக்கும்படி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் மாநில காவல்துறை தலைவர் சுல்கான் சிங் உத்தரவிட்டிருந்தார். அப்போது பள்ளி நிர்வாகங்களை காவல்துறையினர் தொடர்பு கொண்டு, புளூவேல் விளையாட்டில் மாணவர்கள் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.