புவி வெப்பமயமாவதும், பருவநிலை மாறுபடுவதும் இயற்கையைப் பேணிக் காக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக கடவுள் நமக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
முன்னோர்கள் கட்டிக்காத்த இயற்கை வளங்களை சுயலாபத்துக்காக நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஓúஸான் படலத்தைப் பாதுகாப்பது தொடர்பான "மாண்ட்ரியல் புரோட்டோகால்' உடன்படிக்கையை சர்வதேச நாடுகள் ஏற்றுக் கொண்டதன் 30-ஆவது ஆண்டு விழா தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கலந்துகொண்டு பேசியதாவது: நமது மூதாதையர்கள் நமக்கு தூய்மையான நதிகளைத் தந்துவிட்டுச் சென்றனர். சுத்தமான காற்றை வழங்கிவிட்டுச் சென்றனர். மாசற்ற புற உலகைக் கொடுத்துவிட்டுச் சென்றனர். ஆனால், நாம் அவற்றைப் பேணிக் காக்கவில்லை. சுயதேவைகளுக்காகவும், தன்னலத்துக்காகவும் இயற்கை வளங்களை அழித்துக் கொண்டு வருகிறோம்.
அதை உணர்த்தவே கடவுள் ஓர் எச்சரிக்கையை தற்போது விடுத்திருக்கிறார். புவி வெப்பமயமாதல், பருவநிலை மாறுபாடு என்ற பெயர்களில் அந்த எச்சரிக்கைச் செய்தி நமக்குக் கிடைத்துள்ளது. இனியாவது, அவற்றை உணர்ந்து சுற்றுச்சூழலைப் பேணிக் காக்க வேண்டும்.
சர்வதேச அளவில் எத்தகைய உடன்படிக்கைகளை மேற்கொண்டாலும் சரி; இந்த விவகாரத்தைப் பொருத்தவரை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதன் வாயிலாக களப்பணிகளை மேற்கொண்டால் மட்டுமே தீர்வு காண முடியும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதில் உலக நாடுகள் அனைத்தும் உறுதியாக இருப்பதும், ஒன்றுபட்டு செயல்படுவதும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார் அவர்.