நகர்ப்புறக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் கீழ் ரூ.12.89 கோடி மதிப்பிலான 4 புதிய நகர்ப்புறக் கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒடிஸா அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
மாநில அரசின் தலைமைச் செயலர் ஏ.பி.பதி தலைமையில் புவனேசுவரத்தில் புதன்கிழமை நடந்த உயர் நிலை வாரியக் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
இத்திட்டங்களால் சமுதாயத்துக்குக் கிடைக்கும் பயன்கள், வருவாய் பெருக்கம் உள்ளிட்ட அம்சங்களை ஆராயுமாறும் நிறைவேற்றப்பட்ட திட்டங்களால் கிடைத்திருக்கும் பலன்களை மதிப்பிடுமாறும் வீட்டுவசதி, நகர்ப்புற மேமபாட்டுத் துறை அதிகாரிகளை பதி கேட்டுக்கொண்டார்.
புவனேசுவரத்தில் ரூ.56.20 லட்சம் மதிப்பீட்டில் நடமாடும் கழிப்பறைகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கழிப்பறைகள் மாஸ்டர் கேன்டீன், பாரமுண்டா பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்படும்.
இது தவிர, ஹிஞ்சிலிகட் பகுதியில் ரூ.5.40 கோடி மதிப்பில் கண்மாய்களையும் தித்திலகரில் ரூ.5.41 கோடி மதிப்பில் நீர் நிலைகளையும் தூர்வாரும் திட்டத்துக்கும் புவனேசுவரம் கடகனா பகுதியில் குப்பைகளால் ஆன உரக் கிடங்கை ரூ. 1.5 கோடி மதிப்பில் அமைக்கும் திட்டத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.