ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்குவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
இந்த முடிவின் மூலம், ரயில்வே துறையில் பணியாற்றும் 12.30 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள்.
இதுதொடர்பாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
வழக்கமாக, ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 72 நாள் ஊதியம், போனஸாக வழங்கப்பட்டு வந்தது. கடந்த 6 ஆண்டுகளாக, அவர்களுக்கு 78 நாள் ஊதியம், போனஸாக வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தியின் அடிப்படையில் மாதம் ரூ.7,000 முதல் ரூ.17,951 வரை போனஸாக வழங்கப்படும். இதன் மூலம், மத்திய அரசுக்கு ரூ.2,245 கோடி வரை செலவாகும். அந்தத் தொகை, ஆயுதபூஜை விடுமுறைக்கு முன்பே அவர்களுக்கு வழங்கப்பட்டு விடும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்.), ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை (ஆர்.பி.எஸ்.எஃப்) ஆகியவற்றில் பணியாற்றுவோர், இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற மாட்டார்கள்.