தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் கடந்த 10 மாதத்தில் மட்டும் சாலை விதிகளை மீறிய குற்றத்துக்காக 1,300 போலீஸார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற சாலை விதிகளை மீறினால் அபராதம் செலுத்த வேண்டும் என்ற பதிய விதி கடந்த 2 மாதங்களுக்கு முன் அமல்படுத்தப்பட்டது. இதன்பிறகு சாலை விதிகளை மீறிய குற்றத்துக்காக 300 போலீஸார் மீது வழக்குப்பதிவானது.
போக்குவரத்து காவல்துறையின் தகவலின்படி கடந்த 2 மாதங்களில் மட்டும் ஹெல்மெட் உபயோகிக்காதது, சீட் பெல்ட் அணியாதது உள்ளிட்ட சாலைவிதி மீறல்கள் குற்றத்தின் அடிப்படையில் 1,06,285 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
இதுபோன்ற வழக்குகளில் சிக்கிய போலீஸார் உடனடியாக அபராதம் செலுத்த வேண்டும். குறிப்பாக இவ்விவகாரங்களில் காவல்துறையினருக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இனி இதுபோன்ற குற்றச்செயல்கள் தடுக்கப்படும் என தெலுங்கானா டிஜிபி அனுராக் ஷர்மா தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதமும் 100 முதல் 150 போலீஸார் மீது விதி மீறியது தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. அதுபோன்றவர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
சிசிடிவி, சமூக வலைதளங்கள் உள்ளிட்ட சாட்சியங்களுடன் போலீஸார் மீதான குற்றச்சாட்டுகள் ஆதராத்துடன் அம்பலமாகிறது.
அதுதொடர்பான ஒழுக்க நடவடிக்கைகள் போலீஸார் மீது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என ஹைதராபாத் காவல்துறை இணை ஆணையர் வி.ரவீந்தர் தெரிவித்தார்.