காஷ்மீரில் வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அனந்தநாக் மாவட்டம் பிஜ்பெஹரா பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, காஷ்மீர் போலீஸார் அடங்கிய குழு வியாழக்கிழமை மாலை முதல் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சண்டைக்குப் பிறகு பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். மேலும், இரு பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றபோது அப்பகுதி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். அவர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை.
கொல்லப்பட்ட பயங்கரவாதியின் பெயர் யாவர் என்பதும், அவர் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவம் நடத்த பகுதியில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.