மஹாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ளது பிரபல ஷீரடி பாபா திருக்கோயில். இங்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். இங்கு செல்வதற்கு பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உள்ளன.
இந்நிலையில், ஷீரடியில் விமானநிலையம் அமைக்க மஹாராஷ்டிர அரசாங்கம் திட்டமிட்டது. இதையடுத்து ஷீரடியை அடுத்துள்ள கோபர்கான் தாலுக்காவில் அகமதுநகர் மாவட்டத்தில் விமானநிலையம் அமைக்கப்பட்டது.
இதற்கு வரையறுக்கப்பட்ட அனுமதியை 2011-ம் ஆண்டு அளிக்கப்பட்டது. இதனால் விஜபி அந்தஸ்தில் உள்ளவர்கள் மற்றும் இதர அவசர தேவைகளுக்கு மட்டுமே இந்த விமானநிலையம் பயன்பாட்டில் இருந்தது.
ஷீரடி விமானநிலையத்தில் 2,500 மீட்டர் நீளத்துக்கு விமான ஓடுதளப் பாதை அமைந்திருந்தாலும் அதில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சரியான முறையில் கட்டுமானம் இல்லை எனக் கூறி பொதுமக்களுக்கான சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தடையை நீக்க வலியுறுத்தி கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகத்துக்கு மஹாராஷ்டிர அரசாங்கம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது.
இந்நிலையில், இந்த விமானநிலையத்தின் கட்டுமானம் முழுமை பெற்றுள்ளதாகவும், கோட் 3சி ரக விமானங்களை இயக்கும் அளவுக்கு மேம்பட்டு உள்ளது. எனவே ஷீரடி விமானநிலையம் இனி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றதாகக் கூறி விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இதற்கு அனுமதி அளித்தது.