ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், சிறுமியின் குடும்பத்தினர், அவர்களது வழக்குரைஞர், குடும்ப நண்பர் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்குமாறு மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
முன்னதாக, தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரியும், கதுவாவில் நடைபெறும் வழக்கு விசாரணையை சண்டீகருக்கு மாற்றக் கோரியும் சிறுமியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதனை அவசர வழக்காக விசாரிக்க அவர் தரப்பு வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தினார். அதனை ஏற்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டது.
பின்னர் நீதிபதிகள் அமர்வு தங்களது உத்தரவில் கூறியதாவது:
காவல்துறை வழக்கு விசாரணையில் சிறுமியின் தந்தை திருப்தி தெரிவித்துள்ளதால், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கோரும் விவகாரத்தை கருத்தில் கொள்ளத் தேவையில்லை.
அத்துடன், பாதுகாப்பு கோரிய விவகாரத்தில் இடைக்கால நடவடிக்கையாக, சிறுமியின் குடும்பத்தினர், அவர்களது வழக்குரைஞர் தீபிகா சிங் ரஜவத், வழக்கில் உதவும் குடும்ப நண்பர் தாலிட் ஹுசைன் ஆகியோருக்கு ஜம்மு காஷ்மீர் காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்க அறிவுறுத்தப்படுகிறது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறாருக்கான பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.