நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசுகளும், தங்களது மாநிலங்களில் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் ஆய்வு நடத்தி, அதுகுறித்த அறிக்கையை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பிகார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் குழந்தைகள் காப்பங்களில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், நாடு முழுவதிலும் குழந்தைகள் காப்பகங்களில் ஆய்வு நடத்தப்படும் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி கூறியிருந்தார்.
இந்நிலையில், அவரது அமைச்சக செயலர் ராகேஷ் ஸ்ரீவாஸ்தவா, மாநில அரசு தலைமைச் செயலர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
சிறார் நீதிச் சட்டத்தின் பிரிவு 54-இன் கீழ், அனைத்து குழந்தைகள் காப்பகங்களிலும் ஆய்வுகள் நடத்த மாநில அரசு தலைமைச் செயலர்கள் உத்தரவிட வேண்டும். மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பின் கீழ் ஆய்வுகள் நடத்தி, அதுகுறித்த அறிக்கையை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆய்வுகளின்போது, காப்பகத்திலிருக்கும் குழந்தைகள் முறைகேடான செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிந்தால், அவர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். பாதிப்பை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் ராகேஷ் கூறியுள்ளார்.
அரசு சாரா அமைப்புகளால் குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாவதை தடுக்க, ஒரே காப்பகத்தை மிகப்பெரிய அளவில் நடத்துமாறு மாநில அரசுகளுக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார்.