கேரளா வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 67-ஆக உயர்வு
கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
மழை, வெள்ளம் மற்றும் மண் சரிவால் மாநிலம் முழுவதும் 1,500 வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. இதில் 101 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளன.
வெள்ளம் சூழ்ந்த மாவட்டங்களில் ராணுவ வீரர்கள், கடலோர காவல்படை, விமானப்படை, தேசிய மற்றும் பேரிடர் மீட்பு படையினர், தீயணைக்கும் படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆகஸ்டு 9-ஆம் தேதி முதல் தற்போது வரை இந்த கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 67-ஆக அதிகரித்துள்ளது. அதிலும் இன்று ஒரேநாளில் மட்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே மீட்புப் பணிக்களுக்கா மத்திய அரசு கூடுதலாக ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள், படகுகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்தார்.
மேலும், வெள்ள பாதிப்பு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்ததாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.